5 தினங்களில் சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு... முதலீட்டாளர்களுக்கு ரூ.2.23 லட்சம் கோடி லாபம்..

 
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் உயர்வு கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த திங்கட்கிழமையை தவிர்த்து மற்ற 4 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. அமெரிக்க பெடரல் வங்கி மினிட்ஸ், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, அன்னிய முதலீடு, சர்வதேச நிலவரங்கள் மற்றும் நிறுவனங்களின் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

கச்சா எண்ணெய்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.284.53 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 18) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.30  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.23 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 630.16 புள்ளிகள் உயர்ந்து  62,293.64  புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 205.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,512.75 புள்ளிகளில் முடிவுற்றது.