இந்த வாரம் பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவு..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் வீழ்ச்சி கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் (திங்கள், வியாழன்,வெள்ளி) பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. கடந்த அக்டோபர் மாத சில்லரை விலை மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க பெடரல் வங்கி நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகள், அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு மற்றும் நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமெரிக்க பெடரல் வங்கி
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.282.30 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 11) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.284.45  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.15 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 131.56 புள்ளிகள் குறைந்து  61,663.48  புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 42.05 புள்ளிகள் சரிவு கண்டு 18,307.65 புள்ளிகளில் முடிவுற்றது.