பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு... சென்செக்ஸ் 87 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கி இன்னும் வட்டி உயர்வு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளவில்லை என்ற தகவல் உள்ளிட்ட காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவன பங்கின் விலையில் மாற்றம் இல்லை. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,360  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,137  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 129 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.30 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.84 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 87.12 புள்ளிகள் குறைந்து 61,663.48 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 36.25 புள்ளிகள் சரிந்து 18,307.65 புள்ளிகளில் முடிவுற்றது.