வர்த்தக துளிகள்.. விரைவில் ஐ.டி. துறை 2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும்.. இன்போசிஸ் இணை நிறுவனர் நம்பிக்கை

 
கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

டிவிட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வரும் வேளையில், ஐ.டி. துறை 2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் என இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், விரைவில்  ஐ.டி. துறை 2 லட்சம் பேரை பணியமர்த்தும் என நான் எதிர்பார்க்கிறேன். தொழில்நுட்ப துறையில் முதலீடு மற்றும் டிஜிட்டமயமாக்கல் அடுத்த பல ஆண்டுகளுக்கு தொடரும் என்பதால் இந்த துறை பாதுகாப்பாக வளர்ச்சி காணும் என தெரிவித்தார்.

வங்கி ஸ்டிரைக்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அண்மையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி (மூன்றாவது சனிக்கிழமை) நாடு தழுவிய வேலைநைிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்நிலையில் வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால் ஏ.டி.எம். உள்ளிட்ட வங்கி சேவைகள் நாளை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வீடு

டெல்லி என்.சி.ஆர்., அகமதாபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் டாப் 8 நகரங்களில் கடந்த செப்டம்பா் காலாண்டில்  வீடு விலை சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் உயர்ந்துள்ளது என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் வீடுகளின் விலை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2019 முதல் 2022 வரையிலான காலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ விசாக்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. நம் நாடு உலகின் மருத்துவ சுற்றுலா மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் மற்றும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கிட்டத்தட்ட 600 மருத்துவமனைகள் இந்தியாவில் குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கின்றன என தெரிவித்தார்.