பங்குச் சந்தைகளின் தொடர் ஏற்றத்துக்கு தடை.. சென்செக்ஸ் 230 புள்ளிகள் குறைந்தது..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன்  தொடங்கியது. பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்ட போதிலும் அது நீண்ட நீடிக்கவில்லை. அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வு நடவடிக்கை தீவிரமாக தொடரும் என்ற சந்தேகம் முதலீட்டளார்களிடம் ஏற்பட்டது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்ட் டி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் மகிந்திரா உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டைட்டன்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,518  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,991  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 107 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.283.14 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.17 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 230.12 புள்ளிகள் குறைந்து 61,750.60 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 63.75 புள்ளிகள் சரிந்து 18,343.90 புள்ளிகளில் முடிவுற்றது.