சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்... சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற நேர்மறையான தகவல்கள் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் காண உதவியாக அமைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எல் அண்ட் டி நிறுவன பங்கின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேவேளையில், ஐ.டி.சி. மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.டி.சி. தயாரிப்புகள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,647  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,856  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 128 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.285.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.57 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

கச்சா எண்ணெய்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 248.84 புள்ளிகள் ஏற்றம் கண்டு 61,872.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 74.25 புள்ளிகள் உயர்ந்து 18,403.40 புள்ளிகளில் முடிவுற்றது.