பங்குச் சந்தைகளில் இந்த வாரம் காளையின் ஆதிக்கம்.. 4 தினங்களில் சென்செக்ஸ் 845 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. 4 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 845 புள்ளிகள் உயர்ந்தது.

குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்பதால், இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த திங்கள் மற்றும் இன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றத்தை சந்தித்தன. கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

பணவீக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.284.45 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 4) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.283.01  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.44 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 844.68 புள்ளிகள் உயர்ந்து 61,795.04 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 232.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,349.70 புள்ளிகளில் முடிவுற்றது.