பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்தது.

பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கடந்த அக்டோபர் மாத விற்பனை சிறப்பாக இருந்தது, இந்திய ரிசர்வ் வங்கி சிறப்பு நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தன.

ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,830 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,615  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 137 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.94 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 374.76 புள்ளிகள் உயர்ந்து 61,121.35 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 133.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,145.40 புள்ளிகளில் முடிவுற்றது.