சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 767 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 767 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆரம்பத்தில் வர்த்தகத்தில் சிறிது ஏற்ற இறக்கம் நிலவினாலும், பின்னர் பங்கு வர்த்தகம் மளமளவென ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் எச்.டி.எப்.சி. உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,661 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,653 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.270.15 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.68 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 767.00 புள்ளிகள் உயர்ந்து 60,686.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 229.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,102.75 புள்ளிகளில் முடிவுற்றது.