5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.34 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 1,491 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 5 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் உயர்வு கண்டது. கடந்த வியாழன்கிழமையை தவிர்த்து மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.கொரோனா வைரஸ பரவல் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்ட எதிர்மறையான தகவல்கள் பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.272.29 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 31) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.95 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,490.83 புள்ளிகள் உயர்ந்து 59,744.65 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 458.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,812.70 புள்ளிகளில் முடிவுற்றது.