இந்த வார பங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 1,478 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 1,478 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த திங்கள் முதல் நேற்று வரையிலான 4 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இன்று மட்டுமே பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், கடந்த நவம்பர் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. அதேசமயம் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு பங்குச் சந்தையில் பெரிய அளவிலான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

காலாண்டு நிதி நிலை முடிவுகள்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.278.49 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 7) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.272.29 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.20 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,478.38 புள்ளிகள் உயர்ந்து 61,223.03 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 443.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,255.75 புள்ளிகளில் முடிவுற்றது.