ஆம்பூர் அருகே எருதுவிடும் விழா… 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

 

ஆம்பூர் அருகே எருதுவிடும் விழா… 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே தைப்பூச விழாவையொட்டி நடந்த எருது விடும் விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரங்குப்பம் கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்தும் வந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதனையொட்டி, காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர், வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்து விடப்பட்டன.

போட்டியை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து புறப்பட்ட காளைகள், சீறிப்பாய்ந்து பந்தைய இலக்கை நோக்கி சென்றன. இந்த போட்டியை பாதையின் இருபுறமும் சூழ்ந்து நின்று ஆயிரக்கணககான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

ஆம்பூர் அருகே எருதுவிடும் விழா… 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்த வாணியம்பாடியை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 70 ஆயிரமும், இரண்டாம் பரிசாக வளையாம்பட்டை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம்பிடித்த அன்னேறி பகுதியை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. எருதுவிடும் போட்டியை ஒட்டி , 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.