ஓடிப் போய் திருமணம் செய்த காதல் ஜோடிகளுக்கு காவல் நிலையத்திலேயே கத்திக்குத்து

 

ஓடிப் போய் திருமணம் செய்த காதல் ஜோடிகளுக்கு காவல் நிலையத்திலேயே கத்திக்குத்து

நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த காதல் ஜோடியினரை பெண்ணின் சகோதரர் காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிப் போய் திருமணம் செய்த காதல் ஜோடிகளுக்கு காவல் நிலையத்திலேயே கத்திக்குத்து

நெல்லை பேட்டை கோடீஸ்வரன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25), இவரும் நெல்லை டவுண் பழனி தெருவைச் சேர்ந்த ரம்யா (வயது 21). இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இன்று பிற்பகலில் இருவரும் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ரம்யாவின் சகோதரர் ராம்குமார் திடீரென காவல் நிலையத்திற்குள் புகுந்து தனது தங்கை ரம்யாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது காதலன் ஆனந்தராஜ் இதனை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் . மேலும் தப்பியோட முயன்ற ராம்குமாரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.