பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைகாட்சிகளிலும் சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசின் தமிழ் புறக்கணிப்பு மற்றும் ஹிந்தி திணிப்பு போன்ற செயல்களுக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, தமிழர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படாததற்கும் காரணம் இதுவே. இந்த நிலையில், தமிழகத்தில் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், தூர்தர்ஷனில் தினமும் காலை 7.15 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் ஒளிபரப்பாகும் சமஸ்கிருத செய்திகளை அனைத்து மாநிலங்களும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் வாராந்திர செய்தி தொகுப்பை ஒளிபரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.