இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி!
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் சின்னமுட்டம் தூண்டில் வளைவு பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி அடுத்த சின்னமுட்டம் நான்காவது அன்பியம் பகுதியை சேர்ந்தவர் ஹென்றி பெர்னாண்டஸ். இவரது மகன் அக்ஷத் (15 ). இதேபோல், 16-வது அன்பியம் பகுதியை சேர்ந்தவர் ஜெபிலன் (17). நண்பர்களான இருவரும் நேற்று மாலை சின்னமுட்டம் துறைமுக தூண்டில் வளைவு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலைதடுமாறி கடலோரத்தில் கொட்டப்பட்டு இருந்த பாறாங்கற்களில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அக்ஷத்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தார். தலையில் படுகாயமடைந்த ஜெபிலன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.