கையில் ஈரம்… ஃபேன் சுவிட்ச் போட்ட சிறுவன்… மயங்கிய நிலையில் பறிபோன உயிர்!- சென்னையில் நடந்த சோகம்

 

கையில் ஈரம்… ஃபேன் சுவிட்ச் போட்ட சிறுவன்… மயங்கிய நிலையில் பறிபோன உயிர்!- சென்னையில் நடந்த சோகம்

ஈர கையுடன் ஃபேன் சுவிட்ச்சை போட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தஷ்ணாமூர்த்தி என்பவர் அப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் தருனேஷ்வரன் (4). நேற்றிரவு 11.30 மணியளவில் தருனேஷ்வரன் பாத் ரூம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். தந்தை தக்‌ஷனாமூர்த்தி சிறுவனை பாத்ரூம் அழைத்து சென்றுள்ளார். பின், உள்ளே சென்று அம்மாவுடன் தூங்கு என சொல்லிவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து அமர்ந்துள்ளார் தஷ்ணாமூர்த்தி.

வீட்டுக்குள் சென்ற சிறுவன், ஷோபாவின் மீது ஏறி விளையாடும் போது ஈரக்கையுடன் ஃபேனை போடுவதற்கு சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தருனேஷ்வரன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து மகனை தேடியுள்ளார் தாய். அப்போது, மகன் ஹாலில் உணர்வற்ற நிலையில் கிடந்துள்ளான். இதை பார்த்து அலறியுள்ள தாய், சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனை மின்சாரம் தாக்கியதாக கூறி மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கீழ்ப்பாக்கம் கொண்டுசெல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகனை இழந்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து சூளைமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.