பா.ஜ.க எம்.எல்.ஏ தற்கொலை கடிதம் கிடைத்தது! – மேற்கு வங்க போலீசார் தகவல்
மேற்கு வங்கத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்ட எம்.எல்.ஏ-வின் சட்டைப் பையிலிருந்து தற்கொலைக் கடிதம் கிடைத்ததாக மேற்கு வங்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹேம்தாபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார். கடை ஒன்றின் கம்பியில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரை அடித்து கொலை செய்துவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர்.
The suspected heinous killing of Debendra Nath Ray, BJP MLA from Hemtabad in West Bengal, is extremely shocking and deplorable. This speaks of the Gunda Raj & failure of law and order in the Mamta govt. People will not forgive such a govt in the future. We strongly condemn this.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 13, 2020
அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் இந்த கொலை தொடர்பாக மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்து ட்வீட் வெளியிட்டார். மம்தா பானர்ஜியே கொலை செய்துவிட்டது போல பா.ஜ.க-வினர் இந்த செய்தியை சமூக ஊடகங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
இந்த மரணம் தொடர்பாக மேற்கு வங்க போலீசார் விளக்கம் அளித்துள்ளார். அவர்கள் வெளியிட்ட ட்வீட் பதிவில், “இன்று காலை ஹேம்தாபாத் எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் உடல் பாலியா என்ற இடத்தில் உள்ள மொபைல் கடையில் தொங்கியபடி இருந்தது. அவருடைய சட்டைப் பையிலிருந்து தற்கொலைக்குக் காரணம் என்ன என்று அவர் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நபர்கள் அவருடைய தற்கொலைக்குத் தூண்டியதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்தில் மோப்பநாய், சிறப்பு விசாரணைக் குழு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. உடற்கூறு ஆய்வு இதுவரை நடக்கவில்லை. விசாரணை முடிவதற்கு முன்பாகவே மக்கள் ஒரு பக்க சார்புடன், தவறான முடிவுக்கு வர வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.