39 ஆண்டுகளாக போராடி 1 லட்சம் மரக்கன்றுகளை நட்ட பீகார் மனிதர்.. மலையை வனப்பகுதியாக மாற்றி காட்டிய அதிசிய மனிதர்
பீகாரில் தனிமனிதராக ஒருவர் கடந்த 39 ஆண்டுகளாக 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு தரிசாக இருந்த மலையை வனப்பகுதியாக மாற்றியுள்ளார்.
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர் 54 வயதான திலீப் குமார் ஷிகந்தர். அவர் கடந்த 1982ம் ஆண்டு முதல் கயாவில் உள்ள பிரம்யோனி மலையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அவற்றை மரங்களாக வளர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: எனது குழந்தை பருவத்தில் நான் இந்த மலைக்கு அடிக்கடி சுற்றுலா வருவேன். ஒருநாள் என் தந்தையிடம் இந்த மலையில் ஏன் மரங்கள் இல்லை என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு பழமொழி கூறி கயா மலைகளில் மரம் இருக்காது என தெரிவித்தார்.
இதனையடுத்து நான் அந்த மலையை பசுமையாக்க முடிவு செய்தேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, ராணி லட்சுமிபாய், வீர் கன்வார் சிங், பகவத் சிங், ராஜ்குரு மற்றும் லோக்மன்யா திலக் ஆகியோர் பெயரில் மரக்கன்றுகளை நட்டேன். தற்போது நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயரில் மரக்கன்றுகளை நடுகிறேன். என்னுடைய முயற்சிக்கு அரசு ஒரு முறை விருதும் வழங்கியது.
எனது சுற்றுப்புறசூழல் பணிக்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் சான்றிதழ் வழங்கினர். இந்த மலையை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.