மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி!

 

மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி!

ஈரோடு

ஈரோடு அருகே கிரக பிரவேசத்திற்கு மா இலை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி, பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர்கள் தேவராஜ் – பழனியம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் கோபால கிருஷ்ணன் (27). இவர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தேவராஜ் அந்த பகுதியில் கட்டிய புதிய வீட்டிற்கு நேற்று கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.

மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி!

இதற்கு தோரணம் கட்டுவதற்காக, கோபாலகிருஷ்ணன் வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி மா மரத்தில் இலை பறிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மரத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி உரசியதில், கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரக பிரவேசத்தின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.