ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுத்து படுகொலை – ஆடு திருடியதை தட்டிக்கேட்டதால் கொடூரம்

 

ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுத்து படுகொலை – ஆடு திருடியதை தட்டிக்கேட்டதால் கொடூரம்

திருச்சி திருவாணைக்கோயில் பகுதியில் ஆடு திருடியதை தட்டிகேட்ட ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவானைக்காவல் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முருகன் (50). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், 3 மகள்கள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி நள்ளிரவில் முருகன் வீட்டில் வளர்த்து வந்த 3 ஆடுகளை, பாரதிநகரை சேர்ந்த ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் பரமேஸ்வரி, அவரது மகன் மணிகண்டன், சச்சிதானந்தம் உள்ளிட்டோர் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் குடும்பத்தினர் அவர்களை தட்டிகேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பரமேஸ்வரி தரப்பினர் தாக்கியதில் முருகன் மற்றும் புஷ்பவல்லி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, இருவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் முருகனிடம் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுத்து படுகொலை – ஆடு திருடியதை தட்டிக்கேட்டதால் கொடூரம்

இந்நிலையில், முருகன் மற்றும் புஷ்பவல்லி ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த பரமேஸ்வரி, அவரது மகன் மணிகண்டன், சச்சிதானந்தம் உள்ளிட்ட 15 பேர், செல்வா நகரில் இறங்கிய முருகனை பயங்கர ஆயுதங்களால் தாக்கியதுடன், ஆடு அறுக்கும் கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், இதனை தடுக்க முயன்ற புஷ்பவல்லியையும் அவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், படுகாயமடைந்த புஷ்பவள்ளியை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகர துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவான மணிகண்டன், சச்சிதானந்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுத்து படுகொலை – ஆடு திருடியதை தட்டிக்கேட்டதால் கொடூரம்