கட்சியின் ஒப்புதல் பெற்ற பிறகே நேர்காணல்கள் வழங்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி

 
annamalai

பாஜகவை சேர்ந்த சிலர் யூடியூப் சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவித்து வருவதாகவு, 
கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நமது கட்சியின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க் கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைத்தளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு இணையாக யூடியூப் செயலியில் எண்ணற்ற சேனல்கள் இயங்கி வருகிறது. நமது கருத்துக்களை முன்னெடுத்து வைப்பதற்கு யூடியூப் சேனல்களும் பெரிதளவில் உதவுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.


ஆனால் இவ்வாறு யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்த காணொளியை காணும் மக்களுக்கு இது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் நமது கட்சியின் எண்ண ஓட்டம் இது தான் போன்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்து சென்றுவிடுகிறது,

கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் அதை நமது மாநில ஊடக பிரிவின் தலைவர் திரு ரங்கநாயக்கலு அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நீங்கள் நேர்காணல்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக நமது கட்சி சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.