“பெருந்துறையில் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகள், வரும் 28ஆம் தேதி திறப்பு” – அமைச்சர் முத்துசாமி தகவல்

 

“பெருந்துறையில் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகள், வரும் 28ஆம் தேதி திறப்பு” – அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகள், வரும் வெள்ளிக் கிழமை செயல்பாட்டுக்கு வரும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வுகூட்டம் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் தற்போது அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி சற்று குறைவாகவே உள்ளதாகவும், அதை அதிகரிக்கும் விதமாக ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை 250 ஆக உயர்த்தப்பட்டு, ஓரிரு நாளில் செயல்பாட்டுக்கு வரும் என கூறினார்.

இதேபோல், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகள் 550-லிருந்து 650 ஆக உயர்த்தி உள்ளதாகவும், மேலும் அந்த வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 300 ஆக்சிஜன் படுக்கைகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார். மேலும், பெருந்துறையில் ஜூன் 20-க்குள் 1,550 ஆக்சிஜன் படுக்கை வசதி இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“பெருந்துறையில் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகள், வரும் 28ஆம் தேதி திறப்பு” – அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டத்தினருக்கும் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு வராமல் பார்க்கப்படும் என கூறிய அமைச்சர் பள்ளி, கல்லுாரிகளில் ஆக்சிஜன் வசதியின்றி சிகிச்சை பெற 3,500 படுக்கை வசதி உள்ளதாகவும், அவற்றில் தற்போது 1,000 படுக்கைகள் தவிர மற்றவை காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார். வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதோர், மருத்துவ சிகிச்சை தேவைபடுபவர்கள் அங்கு சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி அரசு மருத்துவமனைகளில் தலா 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தரம் உயருவதாக கூறிய அமைச்சர் முத்துசாமி, எனினும் அங்கு குறிப்பிட்ட படுக்கைகளில் மட்டும் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மற்ற படுக்கைள், பிற கட்டடங்கள், பிற நோயாளிகளுக்கு முன்னுரிமையில் வழங்கி, சிகிச்சை தொடரும் என்றும் கூறினார்.