ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்கவும், ஓய்வுபெறும் ஊழியருக்கு 10 லட்ச ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் வழங்கவும் வலியுறுத்தினர்.
மேலும், பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கவும், 3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்கள் மற்றும் 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.