அமமுக தலைவராக சசிகலா தேர்வு செய்யப்படுவார்; தங்க தமிழ்ச்செல்வன் தகவல்!
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், மற்றும் அதிமுக கட்சிப் பெயர்களை, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு இணைந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது
சென்னை: சிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும், அமமுக-வின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அக்கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறியது. அந்த வகையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், மற்றும் அதிமுக கட்சிப் பெயர்களை, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு இணைந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் அத்தொகுதியில் அபார வெற்றி பெற்றார். மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்த அவர், அதன் பொதுச்செயலாளாரக இருந்து வந்தார். எனினும், அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாமல் இருந்தது.
இதனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர். நீதிமன்றம் வரை சென்று போராடி பரிசுப் பெட்டி சின்னத்தை பொதுச் சின்னமாக டிடிவி தினகரன் பெற்றார்.
அமமுக-வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை டிடிவி தினகரன் நடத்திக் கொண்டிருப்பதால் அமமுக-வை கட்சியாக பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக பொதுச்செயலாளரான தற்போது, சிறையில் இருக்கும் சசிகலா அந்த வழக்கை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு, அமமுக-வின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இன்று நடைபெற்ற அமமுக கூட்டத்தில் டிடிவி தினகரன் அதன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும், அமமுக-வின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சசிகலா ஒப்புதலுடன் தான் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள அவர், 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து தினகரன் விரைவில் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.