அன்புமணியை பார்த்து கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகி: வாயில் அடித்த முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ!
அன்புமணியைப் பார்த்து கேள்வி எழுப்பிய தொண்டர் ஒருவரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை வாயில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒமலூர் : அன்புமணியைப் பார்த்து கேள்வி எழுப்பிய தொண்டர் ஒருவரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை வாயில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம்
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. இதனால் அதிமுக திமுக உள்ளிட்ட இதர கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தேர்தல் பரப்புரையின் போது, வாக்குறுதிகள், அதிமுக- திமுக காரசார விவாதங்கள் அனைத்தையும் தாண்டி, சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் நடந்துள்ளது அதிமுக – பாமக கூட்டணியின் மற்றுமொரு கூத்து.
தருமபுரியில் அன்புமணி
வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் காரணமாகக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து, ஒமலூர் அருகே சிந்தாமணியூர் பகுதியில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை பிரச்சாரம் செய்தார்.
வாயில் அடித்த செம்மலை
அப்போது கூட்டத்திலிருந்த அதிமுக கிளைச்செயலாளர் செந்தில்குமார் என்பவர், ‘5 ஆண்டுகள் இங்கு வரவேயில்லை எம்பியாக தொகுதிக்கு என்ன செய்தீர்கள்’ என்று கேள்வி கேட்க, இதனை சற்றும் எதிர்பாராத செம்மலை,கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகியின் வாயில் அடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கைகலப்பு
இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் மற்றும் தொண்டர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் அங்கிருந்த பா.ம.க தொண்டர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!