உணவு சமைத்ததால் நடந்த விபரீதம்: பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 46 பேர் பரிதாப பலி!
லியாகத்ப்பூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டி ஒன்றில் திடீரென்று தீ பிடித்தது
பாகிஸ்தானில் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 46 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் கராச்சி – ராவல்பிண்டிக்கு இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரயில் இன்று அதிகாலை லியாகத்ப்பூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டி ஒன்றில் திடீரென்று தீ பிடித்தது. பின்னர் அடுத்தடுத்த பெட்டிகளுக்கு தீ மளமளவென பரவின. இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்த கோரவிபத்தில் இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
விபத்துக்கான காரணம் கூறும் போலீசார், ரயிலில் ஒருவர் காலை உணவை கேஸ் சிலிண்டர் உதவியுடன் சமைத்துள்ளார் என்றும் அதனால் தீ பிடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான மரணங்கள் ரயிலிலிருந்து குதித்ததின் மூலம் அரங்கேறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.