×

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த தலிபான்களின் மாஸ்டர் மைண்ட்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார். இவர் தான் தற்போது தலிபான்கள் அமைத்த இடைக்கால அரசின் துணை பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். தலிபான்களை உருவாக்கிய தலைவர் முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் முல்லா பரதார் இருக்கிறார். இவ்வளவு காலமும் தலிபான்களை வழிநடத்தி வந்திருக்கிறார். சத்தமின்றி ரத்தமின்றி ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இவருடைய பிளானே காரணம். முல்லா பரதார் அமெரிக்கா உடனான 20 ஆண்டு
 

20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார். இவர் தான் தற்போது தலிபான்கள் அமைத்த இடைக்கால அரசின் துணை பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். தலிபான்களை உருவாக்கிய தலைவர் முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் முல்லா பரதார் இருக்கிறார். இவ்வளவு காலமும் தலிபான்களை வழிநடத்தி வந்திருக்கிறார். சத்தமின்றி ரத்தமின்றி ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இவருடைய பிளானே காரணம்.

முல்லா பரதார் அமெரிக்கா உடனான 20 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தோஹா ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மிக முக்கியப் பங்காற்றியவர். அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்புக் குழுவின் சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலிலாஜ்துடன் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரும் இவரே தான். தலிபான்கள் காபூலை கைப்பற்றிய பின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் இவரே. தலிபான்கள் மத்தியில் இவருக்கு நற்பெயர் இருப்பதால் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர் பரதார்.

இவரே அடுத்த பிரதமர் ஆவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், துணை பிரதமர் பதவியே கிடைத்துள்ளது. தலிபான்களில் மிகவும் அமைதியானவர், ரகசியமானவர், வெளியுலகிற்கு அதிகமாக வராதவர் போன்ற குணாதிசயங்கள் கொண்டவர். இவர் தலிபான்களுக்கு ஹீரோவாக தெரிந்தாலும் சர்வதேச அளவில் வில்லனாகவே இருக்கிறார். 2010ஆம் ஆண்டில் பரதாரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இச்சூழலில் உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் ஒருவராக முல்லா பரதார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இதழ் நிறுவனமான டைம் (TIME) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த, செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியல் தயாரித்து வெளியிடும். இதற்காக நிறுவனம் உலகளவில் பிரபலமான பலரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும். வாசகர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தாண்டும் டைம் இதழ் 100 நபர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தலைவர்கள் பிரிவில் முல்லா பரதார் இடம்பெற்றுள்ளார். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், மம்தா பானர்ஜி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.