×

கிலோ கணக்கில் அதிகம் சாப்பிடும் இளைஞருக்கு அந்த ஓட்டல் போட்ட திடீர் தடை  

 

வாடிக்கையாளர்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்றுதான் ஓட்டல்காரர்கள் விரும்புவார்கள்.  ஆனால், ஒருவர் அதிகம் சாப்பிடுகிறார் என்று அவருக்கு ஓட்டல் நிர்வாகம்  தடை போட்டிருக்கிறது.

 தயார் செய்து வைத்திருக்கும் உணவில் பாதிக்குமேல் ஒரு வாடிக்கையாளரரே சாப்பிட்டு விடுவதால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு உணவு இல்லாமல் திரும்பிச் செல்வதாக சம்பந்தப்பட்ட அந்த வாடிக்கையாளரை இனிமேல் எங்கள் ஓட்டலுக்கு வரவேண்டாம் என்று ஒரு ஓட்டல் நிர்வாகம் அவருக்கு தடை விதித்திருக்கிறது.   ஒருவரே 4 கிலோவுக்கு மேல் இறைச்சி சாப்பிடுவதால் மற்ற வாடிக்கையாளர்கள் இறைச்சி உணவு  கிடைக்காமல் திரும்பிச் செல்வதால்தான் ஓட்டல் நிர்வாகம் அவர் வந்தாலே இனி அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு போட்டிருக்கிறது .  

சீனாவில் தான் இப்படி ஒரு விசித்திர உத்தரவு போடப்பட்டிருக்கிறது .  அந்த நாட்டில் ஷாங்சா நகரில் வசித்து வருபவர்  ஹாங்.   இந்த இளைஞர் சாப்பிடுவதில் ஜாம்பவான்.   இவர் கிலோ கணக்கில் தான் சாப்பிடுவது வழக்கம்.   இவர் அதிகமாக கிலோ கணக்கில் இறைச்சி சாப்பிடும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹண்டாடி  பார்பிக்யூ ஹோட்டலுக்கு இவர் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.   முன்பெல்லாம் ஒரு கிலோ என்று சாப்பிட்டு வந்தவர் தற்போது 4 கிலோ வரைக்கும் சாப்பிடுவதால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு உணவு இல்லாமல் போவதாக ஓட்டல் நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை அறிவித்திருக்கிறது.

 முன்பு ஒரே நேரத்தில் இரண்டு கிலோ பன்றி இறைச்சியை சாப்பிட்டிருக்கிறார் அந்த இளைஞர்.   அது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதன் பின்னர் திடீரென்று அந்த ஓட்டலுக்கு சென்று 4 கிலோ இறால் மீன் சாப்பிட்டு இருக்கிறார்.   அந்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 தயாரித்து வைத்திருக்கும் உணவில் திடீரென்று ஹோட்டலுக்குள் சென்று பாதிக்குமேல் காலி செய்து விடுவதால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு திடீரென்று உணவு தயார் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.   இதனால் இனி இங்கே வர வேண்டாம் என்று ஓட்டல் நிர்வாகம் அந்த இளைஞருக்கு உத்தரவு போட்டிருக்கிறது.

 இதற்கு அந்த இளைஞர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.    நான் எந்த உணவையும் வீணாக்குவது இல்லை.  என்னால் அதிகம் சாப்பிட முடிகிறது.  அதற்கு நான் என்ன செய்வேன்.   நான் உணவை அதிகமாக வாங்கி அதை சாப்பிடாமல்  வீணாக்கவில்லையே.   தடைவிதித்த நிர்வாகத்தின் இந்த முடிவு எனக்கு வருத்தத்தைத் தருகிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்த இளைஞன்.

 ஆனால் ஹோட்டல் நிர்வாகம்,   ஒரு குறிப்பிட்ட பேருக்கு உணவு தயார் செய்து வைத்திருக்கும் போது திடீரென்று அந்த இளைஞர் ஒருவரே வந்து பாதிக்குமேல் காலி செய்துவிடுவதால் மற்றவர்களுக்கு உடனடியாக உணவு கொடுக்க முடியாமல் போய் விடுகிறது.  இதனால்  மற்ற வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஹோட்டல் நிர்வாகம் பாதிக்கப்படும் என்று தான் இந்த தடை உத்தரவை வைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.