×

இலங்கை வன்முறை.. ஆளும்கட்சி எம்.பியை அடித்துக்கொன்ற போராட்டக்காரர்கள்..

 

இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்ட ஆளும் கட்சி எம்.பியை போராட்டக்காரர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான முடிவுகளே இலங்கையின் இத்தகைய நிலைக்கு காராணம் எனவும்,  பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று  அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன..   ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு போராட்டம் நீடித்து  வந்த நிலையில், அவரை பதவி விலக அதிபர் கோத்தபய கேட்டுக்கொண்டிருந்தார்.  எனினும், ராஜபக்சே ராஜினாமா செய்யமாட்டார் என்று ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.  

இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு திரண்ட ஏராளமான பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.  பின்னர் அங்கு திரண்ட ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்..  ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற பேருந்தை, பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.   எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால்  பதற்றமான சூழல் ஏற்பட்டது.  பின்னர் காவல்துறையினர்  தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை கலைத்தனர்.  

 இதனையடுத்து , இலங்கை முழுவதும்  ஊரடங்கு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது  இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது.  கொழும்புவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கலவரத்தில் ஆளும்கட்சி எம்.பி., அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் காயமடைந்திருக்கின்றனர்.  போராட்டக்காரர்கள் தனது காரை மறித்ததால், அமரகீர்த்தி துப்பாக்கியாக் சுட்டதாகவும்,  இதனால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் அவரி அடித்துக் கொன்றதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது. அதேபோல் மொரட்டுவை மேயரின் வீட்டிற்கு தீ வைத்ததால் பதற்றம் வலுப்பெற்றிருக்கிறது.