×

இலங்கை மக்கள் தினமும் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை வரும் : ரணில் விக்ரமசிங்கே..

 

இலங்கையில் மக்கள் தினமும் 2 வேளை மட்டுமே உணவு உண்ணும் நிலை ஏற்படும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.  

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும், அதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..  நெருக்கடி நிலையை சமாளிக்க  இந்தியா உள்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியும் அந்நாடு மீண்டு வர முடியாமல் சிக்கித் தவிக்கிறது.  ஏற்கனவே அந்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்திருந்தார்.

இந்தச் சூழலில்,  இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் ரணில்,  இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடக்க நிலையில்தான் உள்ளது என்றும், மோசமான விஷயங்கள் இனிதான் வரப்போகிறது என்றும் குறிப்பிட்டார்.  மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்றும், அதுகிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் அவர் கூறினார். 

போதிய அளவி உரங்கள் இல்லாததால், பெரும்போகத்திற்கான  விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும்,   செப்டம்பர், அக்டோபர் வரை மட்டுமே  நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும் எனவும்  ரணில் தெரிவித்துள்ளார்.  இலங்கையை இரண்டு நெருக்கடிகள்  பாதிக்கின்றன என்றும்,  அவற்றில்  ஒன்று ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது, அதுதான் பொருளாதார பிரச்னை எனக் குறிப்பிட்ட  ரணில், இரண்டாவது  இதன் தொடர்ச்சியாக   அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.