×

உலகிலேயே ஃபர்ஸ்ட் டைம்... பன்றியின் இதயம் மனிதனுக்கு - வாழ்வா? சாவா? போராட்டத்தில் வெற்றிகண்ட நபர்!

 

மனிதர்கள் இன்னொருத்தரை திட்டுவதற்கு பன்றி என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள். இனி அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் மனிதகுலத்தைக் காப்பதற்காக தேவலோகத்திலிருந்து இறங்கிவந்த அந்த கடவுளே பன்றிகள் தான் என நிலைமை மாறப் போகிறது. இதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல; உண்மை தான். இயற்கையாகவே மனிதர்களின் டிஎன்ஏ மரபணுக்களுடன் நெருங்கிய தொடர்புடையவை குரங்குகள், எலிகள், பன்றிகளின் மரபணுக்கள் தான். 

அதனால் தான் எந்தவொரு மருந்தை மக்களுக்கு செலுத்துவதற்கு முன்பு எலிகள் ஆய்வக பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயம் பன்றிகளும். கடந்த 30 ஆண்டுகளாக பன்றிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்த ஆராய்ச்சி வளர்ந்து, இன்று பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி அதில் வெற்றியும் காண வைத்திருக்கிறது. ஆம் உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவிலோ பன்றியை வராக அவதாரம் எனக்கூறி கடவுளாக்கி வணங்குகிறார்கள். மூடநம்பிக்கைகளில் இங்கே நாம் உழன்று கொண்டிருக்க அமெரிக்கர்களோ சத்தமில்லாமல் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு மாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள். 57 வயதான பென்னெட் என்ற நபரின் இதயம் முற்றிலும் செயலிழந்து போனது. வாழ்வா சாவா என்ற நிலையில் அவருக்கு 7 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து பன்றியின் இதயத்தைப் பொருத்தியுள்ளனர். அதிருஷ்டவசமாக அவருடைய உடல் பன்றியின் இதயத்தை ஏற்றுக்கொண்டது.

என்றாலும் கூட அவர் இதன் மூலம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு உயிர் பிழைப்பார் என்று தெளிவாகக் கூற முடியவில்லை. இருந்தாலும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றும் முயற்சிகளை இது முடுக்கிவிடும் என அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் உறுப்புகள் இருக்கும்போது ஏன் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட வேண்டும் என கேள்வி எழலாம். மனித உடலுறுப்புகளுக்காக காத்திருந்து காத்திருந்து உயிரிழந்தவர்கள் தான் அதிகம். அந்தளவிற்கு உடலுறுப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

உடலுறப்புகளைத் தானம் செய்பவர்களும் அரிதாக தான் இருக்கிறார்கள். அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேர் யாராவது உடலுறுப்பு தானம் செய்ய மாட்டார்களா என ஏங்கி கொண்டிருக்கின்றனர். அதில் 90 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் மட்டுமே வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. உடலுறுப்பு கிடைக்காமல் தினந்தோறும் 17 அமெரிக்கர்கள் இறக்கிறார்கள். அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆகவே அமெரிக்காவில் வெற்றிக்கரமாக முடிந்த அறுவைச் சிகிச்சை மனித உடலுறுப்புகளுக்கான பற்றாக்குறை நீங்கும் என்ற நம்பிக்கையை வரவழைக்கிறது.