×

இலங்கையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பள்ளத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

 

இலங்கையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பள்ளத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வெடிபொருட்களை இலங்கை போலீசார் செயலிழக்க செய்தனர்.

திருகோணமலை - கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு, சாவாறு பகுதியில் இன்று (டிசம்பர் 5) வெள்ள நீரால் ஏற்பட்ட குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்களும், துப்பாக்கி குண்டுகள்  மீட்கப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்தனர். இலங்கையில் வெள்ளம் வடிந்த நிலையில், கால்நடை வளர்ப்போர் சாவாறு பகுதிக்குச் சென்றபோது, இந்தக்  வெடி பொருட்களை கண்டு போலீசாருக்கு  தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்து வெடி பொருள்களை   மீட்டனர்.

மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்கள்:
கை குண்டுகள்: 109
துப்பாக்கி ரவைகள்: 1678

மீட்கப்பட்ட இந்தக் கை குண்டுகள் அனைத்தும் திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (STF) வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டன. வெள்ள நீரின் அதிகரித்த ஓட்டத்தால் ஏற்பட்ட பள்ளத்தில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டல்காடு, சாவாறு பிரதேசம் முன்னர் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இதன் காரணமாக, இந்த ஆயுதங்கள் அவர்களால் புதைக்கப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த கிண்ணியா   போலீசார் தெரிவித்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரோட்டம், புதைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது," எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து கிண்ணியா போலீஸ்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.