×

"தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்; 2025 வரை அளவா சாப்புடுங்க" - மக்களுக்கு வடகொரிய அதிபர் வலியுறுத்தல்!

 

வடகொரியாவை உலகத்தின் மர்ம தேசம் என்றழைக்கலாம். அந்தளவிற்கு அங்கு மர்மங்கள் நிறைந்திருக்கின்றன. அவர்கள் எந்த தகவல் உலகிற்கு தெரியவேண்டும் என நினைக்கிறார்களோ அது மட்டும் தான் நாம் அறிந்தது. மற்றபடி அங்கு என்ன நடக்கிறது என்பது புரியாத புதிர். இதற்குக் காரணம் அங்குள்ள சர்வாதிகார ஆட்சியாளர்கள் தான். குறிப்பாக தற்போதைய் அதிபர் கிம் ஜாங் உன். மக்கள் எங்கு எப்படி இருக்க வேண்டும், அவர்கள் என்ன ஹேர்ஸ்டைல் வைக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் தீர்மானிப்பது தான்.

அங்கு சமூக வலைதளங்களுக்கு கூட அனுமதியில்லை. கிட்டத்தட்ட வேற்றுகிரகவாசிகளைப் போல் நடந்துகொள்கிறார்கள். வெளி உலகத்திற்கும் வடகொரியாவிற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இவ்வாறான சூழலில் தான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. அதனால் எல்லா நாடுகளும் கிட்டத்தட்ட  மற்ற நாடுகளுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டன. வடகொரியாவை சொல்லவா வேண்டும். அனைத்து எல்லைகளையும் மூடியது. குறிப்பாக உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. 

இதுவரை ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என கிம் ஜாங் உன் கூறுகிறார். ஆனால் உலக சுகாதார நிறுவனமோ இதை முற்றிலுமாக மறுக்கிறது. வடகொரியா முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகக் கூறுகிறது. இது ஒருபுறம் இருக்க, வெளிநாடுகளுடன் தொடர்பை துண்டித்திருப்பதால் உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. மேலும் சூறாவளி, மழை, வெள்ள பாதிப்புகள் இருப்பதால் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

உணவுப் பதுக்கல் அதிகரித்து, அவற்றின் விலையும் விண்ணை முட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பசிக்கொடுமையால் கொத்து கொத்தாக மடிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உணவுப்பொருட்கள் சப்ளை குறுகியதாலும், விவசாய துறை தானிய உற்பத்தி திட்டத்தை பூர்த்திசெய்யாத காரணத்தால் இந்த உணவு பஞ்சம் ஏற்பட்டதாக நாட்டு மக்களிடம் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இந்த உணவு அவசரநிலை 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என்பதால், மக்கள் அதுவரை குறைவான உணவுகளை சாப்பிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.