×

சீனாவில் அடுத்த பரபரப்பு.. மனிதருக்கு பரவிய H3N8 பறவைக் காய்ச்சல்..

 

சீனாவில்   இதுவரை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டுமே  பரவி வந்த H3N8 பறவைக் காய்ச்சல்  தற்போது 4 வயது  சிறுவனுக்கு பரவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வட அமெரிக்காவில் வாழும் நீர் பறவைகளில் முதன்முறையாக 2002ம் ஆண்டு H3N8 பறவைக்காய்ச்சல்  வைரஸ்  கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ்  பறவைகள், குதிரைகள், நாய்கள் விலங்குகளுக்கு பரவுவதாக அறியப்பட்டிருக்கிறது. ஆனாலும்  ஒருபோதும்  மனிதர்களுக்கு   பரவியதாக இதுவரை தரவுகள்  இல்லை. இந்த நிலையில், சீனாவின் ஹினான் மாகாணத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு H3N8 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டதாகவும், அவனுக்கு  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், H3N8 வகை பறவைகாய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள்  அல்லது காகங்கள்  மூலம் சிறுவனுக்கு தொற்று  பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  

ஆனால் சிறுவனின் நெருங்கிய  உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால்   சீன மருத்துவர்கள், H3N8 வைரஸ்  மக்கள் மத்தியில் பரவும் அபாயம் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கின்றனர்.   இதுவரை பறவைகள் மற்றும் விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்ட H3N8 பறவைக்காய்ச்சல், சீனாவில் மனிதர்களுக்கும் பரவ தொடங்கி இருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.