×

ராஜபக்சேக்களுக்கு சொந்தமான ஹோட்டல் தீ வைத்து எரிப்பு.. இலங்கையில் தொடரும் பதற்றம்..

 


இலங்கையில்  ராஜபக்சே சகோதர்களுக்குச் சொந்தமான ஹோட்டலை  போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.  

 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையாக பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சவும் , பிரதமர் மகிந்த ராஜபக்சேவும்   பதவி விலகக்கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து,  வன்முறை வெடித்தது..  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த  மகிந்த ராஜபக்சே  உயிருக்கு பயந்து  மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் திரிகோண மலையில் உள்ள கடற்படை தளபதி வீட்டில் தஞ்சம் அடைந்தார்.  போராட்டக்காரர்கள் அங்கும் குவிந்ததால், இலங்கை தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.   

பிரதமர் மகிந்த ராஜபக்சே வீடு உள்பட ஆளுங்கட்சியினர் 35க்கும் மேற்பட்டோரின்  வீடுகளை தீ வைத்து கொளுத்தினர்.  கடந்த ஒரு வாரமாக இலங்கையே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.  இதுவரை நடந்த போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  231 பேர் காயமடைந்திருக்கின்றனர்.  வன்முறையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் எந்த பலனும் இல்லை.. தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் தங்காலை மெடில்லா பிரதேசத்தில் உள்ள ராஜபக்சே சகோதரர்களுக்கு சொந்தமான ஹோட்டலை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். அத்துடன் இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.