×

"பார்ட்டி கேக்குதோ பார்ட்டி"... ஊசலாடும் போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவி -  மன்னிப்பு கேட்டும் விடாத மக்கள்!

 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப் (99) காலமானதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அவரின் உயிர் பிரிந்தது. அது இங்கிலாந்தில் கொரோனா பரவல் உச்சம் இருந்த காலகட்டம். இங்கிலாந்து மக்களின் உணர்வுகளில் அரச குடும்பத்திற்கு எப்போதுமே முக்கிய பங்குண்டு. அரச குடும்பத்திற்கு எப்போதுமே தனி மரியாதை கொடுப்பார்கள். அரசு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் இளவரசர் பிலிப். 

மக்கள் வெள்ளத்தில் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடந்திருக்க வேண்டும். ஆனால் பிலிப் உடலுடன் இரண்டாம் எலிசபெத் தனியாக அமர்ந்திருந்த காட்சி அந்நாட்டு மக்களின் மனதை உலுக்கியது. இதற்குக் காரணம் கொரோனா பரவல் தான். அதனால் இறுதிச்சடங்கில் மக்கள் கலந்துகொள்ள அரசு அனுமதிக்கவில்லை. எட்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு ஏப்ரல் 18ஆம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்போது இந்த பழைய நினைவுகளை அசைபோட காரணம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல் தான்.

இளவரசர் பிலிப் மறைவுக்கு துக்கம் அனுசரிக்க முடியாமல் மக்கள் அனைவரும் முழு ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கியிருந்த வேளையில் போரிஸ் ஜான்சன், அவரது அலுவலக பணியாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சியில் (மது பார்ட்டி) கலந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக எந்த தடுப்பு விதிமுறைகளையும் அவர் கடைப்பிடிக்கவில்லை. இதனை தக்க ஆதாரத்துடன் The Daily Telegraph என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதுதான் அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பிலிப்பின் இறுதிச் சடங்கு நடைபெற சில மணி நேரம் முன்பு இந்த பார்ட்டி நடைபெற்றது தான் அந்நாட்டு மக்களை ஆவேசமாக்கியுள்ளது.

இதனை ஒப்புக்கொண்ட போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே பகீரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதேபோல பிரதமர் அலுவலகமும் எலிசபெத் மகாராணியிடம் ஃபர்சனலாக மன்னிப்பு கோரியுள்ளது. ஆனாலும் அவரை மக்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஆளும் தரப்பிலிருந்தே போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கலகக்குரல் எழுந்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “ பல மாத மறுப்புக்குப் பிறகு போரிஸ் கூறியிருக்கும் இந்த மன்னிப்பு பயனற்றது. சரி, இப்போதாவது போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா?” என கேட்டுள்ளார். இதனால் அவரின் பதவி ஊசலாடி கொண்டிருக்கிறது.