பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு : பலியானோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரிப்பு..
பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிலும் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி அந்த மாகாணத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், பாகிஸ்தான் முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் மட்டும் சுமார் 13,000 வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. கராச்சி மற்றும் சிந்து மாகாணங்களில் மழை வெள்ளத்திற்கு 70 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 60 பேரும், பஞ்சாபில் 50 பேரும் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய மற்றும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் , நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும் ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை உள்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.