×

வெகுண்டெழுந்த மக்கள்.. அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா.. இலங்கையில் அடுத்தடுத்து பரபரப்பு..

 

இலங்கையில் அதிபர் கோத்தய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை தவிர,  அக்கட்சியின் மற்ற  அமைச்சர்கள் அனைவரும்  கூண்டோடு  ராஜினாமாவை  செய்துள்ளனர்.

இலங்கையில்  பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம்   உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத  பொருளாதார ஏற்பட்டுள்ளது.   விலைவாசிகள்  கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் பெரும்  தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  பால்,  மாவு,  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  போன்றவற்றிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.   அத்துடன் தினசரி  13 மணி நேர மின்வெட்டு, இரவு நேரங்களில்  தெரு விளக்குகள் முற்றிலும் அணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காகிதம் இல்லாததால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடத்தப்படவில்லை, அதேநேரம் பள்ளிகளும் முன்கூட்டியே மூடப்பட்டுவிட்டன.

தொடர் நெருக்கடியால்  வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேற வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருவதால் அங்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.  கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் , கூட்டணிக்கட்சிகளும் சேர்ந்து  போர்க்கொடி தூக்கின. அனைத்துக்கட்சி ஆட்சிமுறை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் நேற்று  இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது  பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள்  வெளியாகின. ஆனால் அந்த தகவலை மறுத்துள்ள பிரதமர் அலுவலகம் தற்போது அதுபோன்ற திட்டம் எதுவும்  இல்லை என  தெரிவித்திருந்தது. இந்தச்சூழலில்  நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) நள்ளிரவில் நடைபெற்ற இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டத்தில்  இலங்கை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டது.

அதாவது   அதிபர் கோத்தய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சவைத்  தவிர, அமைச்சரவையில் மீதமுள்ள   26 அமைச்சர்களும் ஒட்டு மொத்தமாக  பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு  கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.  ராஜபக்ச  சகோதரர்களான   நிதியமைச்சர் பசில் ராஜபக்ச , விவசாயத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச உள்ளிட்ட  அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.