×

நேபாளத்தில் நாளை  ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிப்பு.. 

 

நேபாள மாநிலத்தில் பயணிகள் விமானம் கோர விபத்துக்குள்ளானதையடுத்து, நாளை அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த யெட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக  திடீரென  கிழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. யெட்டி விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இதையடுத்து முழுவீச்சில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சம்பவ இடத்தில் விமானம் தீப்பற்றி எரிந்து கரும்புகை எழுந்ததையடுத்து,  மீட்பு பணி கடும் சவாலானது.  மாலை நிலவரப்படி 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது.  விபத்து குறித்த தகவல் அறிந்ததும், அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தால் பிரசந்தா அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.  விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  

இந்த கோர விபத்தையடுத்து  நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.  விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்தார்.  விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்,  6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.  இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.