புலம்பெயர் தொழிலாளர் பற்றி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர்களுக்கு நன்றி! – கி.வீரமணி அறிக்கை
சொந்த ஊர் திரும்பும் வட இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் அது பற்றி மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி, கவனம் செலுத்தும்படி கேட்டிருப்பதற்கு நன்றி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கொரோனாவின் தாக்குதலால் சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகச் செல்லும் மக்களுக்குத் தேவையான உதவி, பாதுகாப்புகள் தேவை என்ற மனுவின் மீது – அது “அரசின் கொள்கை முடிவு” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றம் இப்படிக் கூறியது அதிர்ச்சிக்குரியது என்றும், பிரபலமான பத்து வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தையடுத்து, நீதிபதிகள் இதில் அக்கறை செலுத்த முற்பட்டது வரவேற்கத்தக்கது.
இதுவரை இரண்டாம் உலக யுத்தப் போரில் வெளிநாடுகளான பர்மா போன்ற நாடுகளிலிருந்தும், 1947 வட நாட்டில் மதக் கலவரங்களின்போது கால்நடையாக பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக குடும்பம் குடும்பமாக நடந்து சென்ற பழைய காட்சிகளையெல்லாம் வெகு ‘சின்னக் கோடு’களாக்கி விட்டதைப்போல, பல லட்சக்கணக்கில் சொந்த மாநிலத்திற்குக் கால்நடையாகப் புறப்பட்டுச் செல்லும் – கொடுமையான நிலை.
இதை உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குமூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜீவாதார உரிமைகளுடன் வாழும் உரிமை படைத்த மக்களுக்குரிய வாழ்வாதாரப் பாதுகாப்புத் தர வேண்டுகோள் விடுத்து வழக்குரைஞர்கள் சிலர் வாதாடினர்.
கருணையையும், சட்ட அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் மேற்காட்டிய போக்கு, ‘‘அரசின் கொள்கை முடிவு – நாங்கள் அதில் தலையிட்டு உத்தரவிட முடியாது’’ என்ற தவறானப் போக்கினைச் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தின் 10 மூத்த வழக்குரைஞர்கள் டெல்லி, மும்பை போன்ற நீதிமன்றங்களில் வாதாடுபவர்கள் கடிதம் எழுதினர்.
மனிதநேயம் ஒளிர வேண்டிய நேரத்தில், பொறுப்பை தாங்களே தட்டிக் கழித்தால், இதற்கு ஆணை பிறப்பிக்க மனமில்லாமல், அலட்சியமான போக்கே என்ற தோற்றம். இவற்றைக் காட்டிய நீதிப்போக்கு பற்றி, மூத்த வழக்குரைஞர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங், விகாஸ்சிங், இக்பால் சாவ்லா, நவ்ரேஸ் சீர்வாய், ஆனந்த்குரோவர், மோகன் கட்டார்கி, சித்தார்த் லூத்ரா, சந்தோஷ் பால், மகாலட்சுமி பாவ்னல், சி.யூ.சிங், ஆஸ்பில்சினாய், மிகிர்தேசாய், ஜானக் துவராகதாஸ், ரஜனி அய்யர், யூசூப் மக்ஹாலா, ராஜீவ் பாட்டீல், காய்த்ரி சிங், சஞ்சய் சிங்வி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்திற்குக் கையெழுத்திட்டுக் கடிதம் அனுப்பினர்.
கடிதம் கிடைத்த அடுத்த நாள் – 26.5.2020 (செவ்வாய்க்கிழமை) ஒரு வகையான நிவாரண நடவடிக்கைகளில் உள்ள போதாமை (inadequate – பல செயல்படாது விட்ட நிலைகள்) பற்றி இப்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. இன்று வியாழன் (28.5.2020) மீண்டும் விசாரணைக்குப் போடப்பட்டுள்ளது என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
பல லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைகளை அலட்சியப்படுத்துதல் ஏற்கத்தக்கதா? அது அரசின் கொள்கை முடிவு தலையிட முடியாது என்பதா? அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவினை அலட்சியப்படுத்தி, கவனிக்கத் தவறிய நீதி மறுப்பு ஆகும் என்பதை இந்த மூத்த வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியதற்கு நமது பாராட்டுதல்கள். சுதந்திரமாக இயங்க வேண்டியது நீதித்துறை கடமை.
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (குறள் 541) என்ற நிலையிலிருந்து, உச்ச நீதிமன்றத்தின் போக்கு சரிகிறதோ என்ற எண்ணம் பரவலாக மக்களுக்கு உருவாகலாமா?. மூத்த வழக்குரைஞர்களை வாழ்த்துகிறோம். தொடரட்டும் உங்கள் நீதி காக்கும் நெடிய பயணம்” என்று கூறியுள்ளார்.