பிரணாப் முகர்ஜி சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம்! – டெல்லி மருத்துவமனை தகவல்
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்து அவர் கண்விழிக்கவில்லை. கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் ஆழ்நிலை கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதற்கு இடையே அவருடைய சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன.
இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சிறுநீரக செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஆழ்நிலை கோமாவில் உள்ளார். வென்டிலேட்டர் உதவியுடன் அவர் வைக்கப்பட்டுள்ளார். மற்ற உறுப்புகள் இயல்பாக செயல்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.