எஸ்.பி.வேலுமணி பற்றி அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு… இயற்கை வளங்கள் கடத்தப்படுவதாக கூறிய தி.மு.க பிரமுகர் கைது!
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் இயற்கை வளங்கள் கடத்தப்படுவதாக புகார் கூறிய தி.மு.க பிரமுகரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி அவதூறு பரப்பியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி சமூக ஊடகங்களில் தென்றல் செல்வராஜ் தவறாக விமர்சித்ததாக எட்டிமடை சண்முகம் என்பவர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவ செய்த போலீசார் தென்றல் செல்வராஜை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் பொள்ளாச்சியில் இருப்பது அறிந்து, அங்கு சென்று கைது செய்தது போலீஸ்.
இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான கார்த்திக், மடத்துக்குளம் எம்.எல்.ஏ ஜெயராமன் கிருஷ்ணன், கோவை மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி உள்ளிட்டவர்கள் அங்கு திரண்டிருந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இது குறித்து நிருபர்களிடம் கூறிய எம்.எல்.ஏ கார்த்திக், “தி.மு.க-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை எஸ்.பி.வேலுமணி தொடுத்து வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த வழக்கும். மாவட்டச் செயலாளர்கள் சி.ஆர்.ராமச்சந்திரன், முத்துசாமி ஆகியோரைத் தொடர்ந்து தென்றல் செல்வராஜ் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் சொல்லியாக வேண்டும். அமைச்சரைக் கண்டித்து விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.