‘விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழன்’ : முதல்வர் நேரில் அழைத்துப் பாராட்டு !
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததற்காகச் சுப்பிரமணியனுக்குப் பல தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. அதனைக் கண்டுபிடிக்க, இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டும் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. அதன் பிறகு, நாசா தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தது.
மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் லினக்ஸ் கணினி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நாசா வெளியிட்ட அந்த புகைப்படங்களை ஆய்வு செய்ததில், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதாக நாசாவிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதற்கு நாசா, அவருக்குப் பாராட்டு தெரிவித்து பதில் மின்னஞ்சல் அனுப்பியது. விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததற்காகச் சுப்பிரமணியனுக்குப் பல தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சுப்ரமணியனை நேரில் அழைத்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.