மே 4-ல் மண்டையை பிளக்கும் கத்திரி வெயில்; பொது மக்கள் ‘கிலி’
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்தது
சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற மே மாதம் 4-ம் தொடங்கவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி நிறைவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்தது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை. கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. கஜா தவிர்த்து, மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்று விட்டதால் மழை இல்லை.
தமிழகத்தில் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக பொதுவாக கருதப்பட்டு வந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் ‘ஃபானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் திசைமாறி சென்றது. இப்புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து செல்லும் என்பதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற மே மாதம் 4-ம் தொடங்கி 29-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயிலின் போது, வழக்கத்தை விட வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதாலும், பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் சதம் அடித்துள்ளதாலும் பொதுமக்களிடைய ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.