பாகிஸ்தான் பிரதமரை பாராட்டிய நடிகை குஷ்பூ: கொச்சை வார்த்தைகளில் வசைபாடும் பாஜகவினர்!
இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதற்கு இம்ரான்கானை பாராட்டிய நடிகை குஷ்பூவை பாஜகவினர் பலரும் விமரிசித்து வருகின்றனர்.
சென்னை: இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதற்கு இம்ரான்கானை பாராட்டிய நடிகை குஷ்பூவை பாஜகவினர் பலரும் விமரிசித்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.
அதன்படி வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தன் இரவு 9.20 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, ‘இம்ரான் கானிடம் இருந்து எதுவும் கற்றுக் கொள்ள இருக்கிறதா? ஆம். கண்டிப்பாக, பிரதமர் மோடி அவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டார். இவரது கருத்து, டிவிட்டரில் சர்ச்சை பொருளாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து பாஜக ஆதரவாளர்கள் பலரும், இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமரை பாராட்டுவதா? என்றும் நீ முஸ்லீம் என்பதால் தான் இந்த பாராட்டு’ என்றும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியும் குஷ்பூவை விமர்சித்து வருகின்றனர்.