தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்: மதுரையில் பரபரப்பு!
ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண் பயணி ஒருவர் ஒருமணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.
மதுரை: ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண் பயணி ஒருவர் ஒருமணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா என்ற பெண் இரண்டு குழந்தைகளுடன் சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அனந்தபுரி விரைவு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். ரயில் மதுரையை அடைந்த நிலையில் தூக்கக் கலக்கத்திலிருந்த பூர்ணிமா இறங்கவில்லை. பின் ரயில் புறப்பட்ட நிலையில் சுதாரித்துக்கொண்ட பூர்ணிமா ரயிலிலிருந்து இறங்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த பூர்ணிமா, ரயிலுக்கும் பிளாட்பாரதுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த சக பயணிகள் அவசர அழைப்பு செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து ரயில்வே போலீசார் பூர்ணிமாவை மீட்க முற்பட்டனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு பிளாட்பாரத்தை உடைத்து பூர்ணிமாவை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காகப் பூர்ணிமாவை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து மதுரை செல்லக்கூடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.