தகாத உறவு… போலீஸ் ஸ்டேஷன் எதிரே கத்தியால் பெண்ணை தாக்கிய காவலர்!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த முப்புடாதி சக்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி. இவர் கடையம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்த நிலையில் இடம்மாறுதல் காரணமாக வீரவநல்லூருக்கு வந்துள்ளார். இவர் கடையத்தில் பணிபுரிந்தபோது, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த முப்புடாதி சக்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முப்புடாதி சக்திக்கும் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த காவலர் தட்சிணாமூர்த்தி சக்தியை கண்டித்துள்ளார். இதை அவர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கடையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள சக்தி வீட்டுக்கு என்ற அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் தலை, கழுத்து பகுதியில் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அப்பெண் அலறி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து பெண்ணை தாக்கிய காவலர் தட்சிணாமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர். பெண் முப்புடாதி சக்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.