கோயில் கோபுரத்தில் விளக்கேற்ற சென்ற அர்ச்சகர் தவறி விழுந்து பலி : சோகத்தில் ஊர்மக்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தீப்பெட்டி தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. 19 வயதான இவர் அங்குள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் அர்ச்சகராக வேலைசெய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கார்த்திகை இரண்டாம் நாள் என்பதால் கோயில் கோபுரத்தில் விளக்கேற்றச் சென்றுள்ளார். அப்போது கோயில் வளாகத்தில், ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்தினர் பிரசாத பொட்டலங்கள் தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தான் ஒரு பெரிய சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டுப் பதறிய அவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, குருமூர்த்தி அசைவின்றி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.