கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரோபோக்கள்! தமிழக அரசு அதிரடி
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளில் இயக்கப்பட உள்ள தானியங்கி ரோபோக்களை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த ரோபோக்கள் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள்,நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று வழங்கும் திறன் பெற்றது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 100 படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. 48 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளபட்டு வருகிறது.
முதல் கட்டமாக இந்த மருத்துவமனையில் 3 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தேவைக்கேற்ப ரோபோக்களின் இயக்கத்தை அதிகப்படுத்த இருக்கிறோம். Propeller techno என்ற தனியார் நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது, இந்த 3 ரோபோக்களுக்கு Zafi, zafing bo, zafing medic என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த 3 ரோபோக்களை செவிலியர்களே இயக்கலாம்.. திருச்சியிலும் 5 ரோபோக்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது” என தெரிவித்தார்.