குருவி சுடும் துப்பாக்கியை வைத்து நண்பர்களை சுட்ட இளைஞர்…குடிபோதையில் நடந்த பயங்கரம்!
இருவரும் அலறி கூச்சலிட அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்த பெரிய சீரகபாடி பகுதியைச் சேர்ந்த முருகன். தறிபட்டறை நடத்தி வரும் இவரது பட்டறையில் ரமேஷ் மற்றும் வெங்கடாசலம் என்ற இருவர் வேலைசெய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ரமேஷ், ஏர்கன் வகையிலான குருவி சுடும் துப்பாக்கியை எடுத்து கொண்டு பட்டறைக்கு வந்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக முருகன் மற்றும் வெங்கடாசலம் இருவரிடமும் காண்பித்துள்ளார். இதை தொடர்ந்து திடீரென்று துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டுள்ளார். இதில் முருகனின் தோள்பட்டையிலும், வெங்கடாசலத்தின் காலிலும் குண்டு பாய்ந்துள்ளது. இதனால் இருவரும் அலறி கூச்சலிட அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்.
குடிப்பழக்கம் கொண்ட ரமேஷ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். மேலும் எதற்காக அவர் துப்பாக்கி வாங்கினார் என்றும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.